You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Monday, February 14, 2011

நபியே எங்களை உன் பரிசுத்த வழியில் நடக்கவிடுவாயாக...ஆமீன்


ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் தொடர்பு உண்டு என்பதை வேதாந்திகள், சித்தாந்திகள்
மட்டுமல்ல, மனத்தத்துவ ஆராய்ச்சி வல்லுனர்களும் கூறுகின்றனர். ஆத்மா என்பது என்ன?
ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் இடையேயுள்ள உறவும் தொடர்பும் என்னென்ன? என்பதைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏக இறைவன் பற்றிய எண்ணம் வராமல் போகாது.

மனித உடல், அதனுள் குடிகொண்டிருக்கும் ஆத்மா இவை இரண்டையும் படைத்து, இயக்கியும் வரும் இறைவன் ஆகிய மூவற்றிற்கும் இடையேயுள்ள பந்தத்தைச் சுற்றி எழுந்தவைதான் உலகின் மதங்கள் அனைத்தும். உடல் என்றோ ஒருநாள் மாய்ந்து கட்டையாகி விடுகின்றது. உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகின்றது. பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்ந்த பின்னர் இறப்பதும் இயற்கையின் நியதிகள் என்றால் உடலோடு தொடர்பு கொண்டிருக்கும் ஆன்மாவிற்கும் மரணம் உண்டா?

ஆன்மா இறப்பதில்லை என்பது இஸ்லாமியக் கோட்பாடு. அங்ஙனமாயின் முடிவு என்ன? மரணம் என்பது மறு உலக வாழ்வுக்குப் புகும் வாயில். மரித்தபின் ஆன்மாவிற்கு வாழ்வு உண்டு. நரகம், சொர்க்கம் என்பதைப் பற்றிய தத்துவார்த்தங்கள் எல்லாம் ஆன்மாவைப்பற்றி நிற்பனவையே.

நபிபெருமானார் அவர்களிடம் ஆன்மா எத்தன்மையானது என்று ஒரு சமயம் கேட்கப்பட்டபோது அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:

"ஆன்மா என்னுடைய 'அம்ரி'ல் உள்ளது."

இவ்வாறு விடை கூறும்படி திருநபியவர்களுக்கு இறைவன் அறிவித்தான். 'அம்ர்' - அம் என்ற பதத்திற்கு கட்டளை, மட்டுதிட்டம் இல்லாதது, விவரிக்க முடியாதது, சூக்கும உலகத்தைச் சார்ந்தது என பலபொருள்கள் உள்ளன. இப்பொருள்களிலிருந்து ஆன்மா இத்தன்மையதுதான் என விவரிக்க முடியாததாகப் படலாம், ஆனாலும் திருகுர்ஆனின் மற்றொரு திருவசனம், "நாம் அதில் 'மனித சரீரத்தினுள்' நம்முடைய உயிரை ஊதினோம்" என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நபிபெருமான் அவர்களும் ஆண்டவன் ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார்கள். இங்கு சிந்திப்பவர்களுக்கு ஓருண்மை புலப்படுகின்றது. "தன்னுடைய உருவத்தில்" என்பது மனித சரீரத்தைக் குறிப்படுவதல்ல. ஏனனில் இறைவன் அரூபி; மட்டுதிட்ட மில்லாதவன்.

மேற்கூறிய திருகுர்ஆனின் திருவசனத்தையும் திருநபியவர்களின் திருமொழியையும் இணைத்துப் பார்த்தால் ஆன்மா இறைவனுடைய அம்சத்தின்பால் பட்டதென்பதும் அவனோடு மிக நெருங்கிய பந்தமுள்ள தென்பதும் தெரியவரும். இத்தகைய ஆன்மா உயிரென்றும் "ரூஹ்" என்றும் பேசப்படுகின்றது.

இத்தகைய ஆன்மா மனித சரீரத்தினுள் குடி கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மாவின் தீராத வேட்கைதான் எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டுமென்பது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதும், அடக்கி ஆள்வதும் அதன் வருங்கால வாழ்விற்கு வழிகோலுவதும், மனித உடலின், மனித மனத்தின் கடமைகளாகும். ஆன்மாவோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சுதந்திரம் பெற்றிருப்பது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் அரும்பாடு படவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி பரிசுத்தப் படுத்துவதற்கோ மனிதன் மிகப் பெரும்பாடு படவேண்டும். ஐம்புலனாசைகளை அடக்கி உலக இச்சைகளை ஒதுக்கி இவ்வுலக வாழ்வைத் துறந்தும், துறவறம் பூண்டும் உடலையும் மனத்தையும் ஒழுங்குபடுத்தி ஆன்மாவை பரிபக்குவப்படுத்த வேண்டுமென்பது ஒரு மார்க்கத்தின் கொள்கை.

இஸ்லாமோ துறவறத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எண்ணம், சொல், செயல், மூன்றையும் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து நித்திய வாழ்க்கையை நடத்தி சில சித்தாந்தங்களில் உறுதியான நம்பிக்கை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆதி ஒருவன், தொழுகை ஐவேளை, நோன்புடைமை, போதியநல் ஏழைவரி, ஹஜ் ஆகியவை எல்லாம் இவ்வுலக வாழ் விலிருந்துகொண்டே மன, மொழி, மெய்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவருவதற்கே. மனிதன் எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனாக இருப்பினும் அவன் ஆற்றல்கள் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் சக்தியொன்று அவனை ஆட்டுவிக்கின்றது. அச்சக்தியே அல்லாஹ். அவனின் அன்பைப் பெறுவதற்கு, அவனை அணுகி அணுகி அவன் பக்கமாக வர முயல்பவன் ஆன்மாவை பரிபக்குவப்படுத்தி அவன் வருங்கால சுக வாழ்விற்கு அடிகோலுபவனாவான்.

இவ்வுலக வாழ்வில் இறைவன் வழி நிற்பவன் மறுமை வாழ்வில் நற்பலன் எய்துகிறான். இங்கு தீய கர்மம் செய்தவன் மறு உலகில் தண்டனையையும், வேதனையையும் அனுபவிக்கிறான். "(இறைவா!)உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம், நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவ்வழி அவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதப்பியவர்களோ சென்ற வழியல்ல."

இறைவனை நேசிப்பது ஒன்றின் மூலமாகவே ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தமுடியும். "ஒருவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு கெஜம் அளவு என்னை நெருங்கினால் நான் இரண்டு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்." என இறைவன் நபிபெருமானவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இறைவனிடம் உண்மை அன்பிருந்தால் ஒருவன் மற்றெல்லாவற்றையும் விட இறைவனையே மிக மிக நேசிப்பான். அவன் ஒவ்வொரு செயலும் இறைவனின் கருத்தின்படியே நடக்கும். இறைநாட்டத்தில் நடப்பதன்றி வேறு எண்ணம் அவனிடம் இருக்காது. "உங்கள் பிதாக்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும். உங்கள் மனைவியரும், நீங்களும் முயன்று சேகரித்த பொருட்களும் குறைந்துபோகுமென நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரங்களும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் உங்கள் வாசஸ்தலங்களும் ஆண்டவனை விடவும், அவனுடைய இரசூலைவிடவும், அவனின் பாதையில் முயற்சி செய்வதை விடவும் உங்களுக்கு அதிகம் பிரியமுள்ளதாக இருப்பின், இறைவனுடைய கட்டளை வருவதை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இறைவன் வரம்பு மீறுகிறவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில்லை" என்று இறைவன் கூறுகிறான்.

மனிதன் இறையன்பு காரணமாக நேர்வழி செல்லத் தவறிவிட்டால் அவன் தன் ஆன்மாவிற்கு, அவன் தன் வருங்கால வாழ்வுக்கு ஊறு விளைவித்தவனாக ஆகிவிடுகின்றான். ஆன்மாவைப்
பக்குவப்படுத்தும் வழி வகைகளிலிருந்து தவறி விட்டவனாகிவிடுகின்றான். "முஹாசபா" வையும், "முராக்கபா" வையும், "முஷாஹிதா" வையும் கடைபிடிக்கத் தவறியவனாகி விடுகின்றான். இத்தகையவர்களின் ஆத்மா, மனித சரீரம் இறந்துவிட்டபின்னர் தான் பெறவேண்டிய உயர் பதத்திற்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாக மாட்டாது.

"எவன் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து
விட்டான்; எவன் அதை பாவத்தில் புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்" என்பது திருமறையின் வசனம். "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவனிடம் செல், அவனிடம் நீ திருப்தி கொள், உன்மீது அவன் திருப்தியடைகிறான், நீ நல்லடியார்கள் குழுவில் சேர்ந்து என் சொர்க்கத்திடம் நீ நுழைந்து விடு" என இறைவன் கூறுவான் என்பது திருகுர்ஆனின் மற்றோரிடத்தில் வரும் வசனங்களாகும்.

இவ்வுலக வாழ்வில் சன்மார்க்கத்தின் வழிநின்று இறை நேசத்தால் பரிபக்குவப்படுத்தப்பட்ட
ஆன்மாவைப் பெற்றுவிட்டவர்களின் மரணம் எப்படி சம்பவிக்கும் என்பதை கவி அல்லாமா இக்பால் அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்:

"மூமின் என்பதைப் பற்றிய ஓரு அடையாளம் நான் சொல்லுகிறேன்
மரணம் அண்டி வருங்காலை அவன் உதட்டில் புன்னகைத் தழுவும்."

தூக்கம்போல் சாக்காடு என்பார்களல்லவா? இஸ்லாம் தூக்கத்தையும் ஒருவித மரண நிலை என்றே கருதுகிறது. இரவு துயில் சென்று காலை எழுவதற்கும், மரித்தபின் ஆன்மா விழித்தெழுவதற்கும், உலக வாழ்வில் கண்துயில்வதையும் பிற்றை நாள் உயிர்த்தெழுவதையுமே உவமானமாக சுட்டிக் காட்டுகின்றனர் இஸ்லாமிய ஆன்ம ஞான வல்லுனர்கள்.

நல்வாழ்வு வாழ்ந்து இறைபக்தியின் மூலம் ஆத்மாவைக் கட்டுப்படுத்தி மறுமை வாழ்வுக்குத்
தன்னை பக்குவப்படுத்தி இறைவனின் 'அம்ர்' என்ற ஆன்மா இறைவனின் பக்கமாக மிக மிக
அண்டிவரச் செய்து கொண்டவர்களின் மரணம் இன்பகரமானது, அல்லாதார் மரணம் துன்பமிக்கது.

இந்த தத்துவார்த்தங்களையெல்லாம், ஆன்னமஞான உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது தக்களை பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் பக்திப் பரவசமிக்க ஆன்ம விசாரணை விருத்தப்பாவொன்று:


"ஆதியொருவனை மறந்துலகில்
அனேகம் பிழைகள் செய்தி றந்தாலங்கண்
நீதிபெறுமுயிர் தனையோ விண்ணோர்
நெறிசேருடலையோ கேட்பார் பின்னே
சோதியருட்படி நரகிலிட்டுச்
சுடும்போபடுந்துயரவனோ நாமோ
ஓதியுணர்ந்தோர்களடியேன் சொன்ன
வுண்மை யறிந்துரை சாற்று வீரே."


ஆதி ஒருவனை மறந்துவிட்டால் பிழைகள் யார்தான் செய்யமாட்டார்கள்? பிழைகள் அனேகம் செய்திருந்தால் மறுமையில் நீதி பெறும் உயிர்தனையோ பின்னர் நெறிசேர் உடலையோ விண்ணோர் கேட்பர். இரண்டையுமே கேட்கக்கூடும். உலக இச்சைகளின்பால் பட்டழிந்து ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தாதவரின் உடலுக்கும் இங்கே விமோசனமில்லை. ஆங்கே உயிருக்கும் விமோசனமில்லை. பின் எதற்குத்தான் விமோசனம்? ஓதியுணர்ந்தோர் உண்மையறிய வேண்டும்; விளக்கம் தரவேண்டும் என்று தம்மை 'அடியேன்' நிலையில் வைத்து சூஃபிஞானக் கவிஞர் பீர் முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் பாடலில் கேட்கும் கேள்வியில் ஒரு அலாதி பாவம் சுடர்விடுகிறது.

No comments:

Post a Comment